பிரச்சனை இல்லாதவர்கள் இவ்வுலகில் இல்லை!

காட்டுக்கே ராஜாவாக இருந்தும் சின்னஞ்சிறு பறவையான சேவலின் கூவல் அதனை கதி கலங்கச் செய்தது. சாதாரண மான்களும், முயல்களும் கூட அந்தக் கூச்சல் குரலுக்கு கொஞ்சமும் பயப்படாமல் செல்லும்போது, தனக்கு மட்டும் அப்படி ஓர் எரிச்சல் ஏன் வருகிறது என்பது எவ்வளவோ யோசித்தும் புரியவில்லை அதற்கு. இப்படி ஒரு தண்டனை எதற்காகத் தனக்குத் தரப்பட்டிருக்கிறது என்று தினம் தினம் எண்ணிப்பார்த்தது அந்த சிங்கம். ஊஹூம். அதற்கான விடை அதற்குக் கிடக்கவேயில்லை.
சரி வேறு எந்த விலங்குக்காவது இந்தக் கஷ்டம் உண்டா? அல்லது தனக்கு மட்டும் தானா? என்று தெரிந்து கொள்ள ஆசைப்பட்ட அத, சிறியது பெரியது என்று வித்தியாசமே இல்லாமல் பார்க்கும் அத்தனை மிருகத்திடமும், சேவலின் கூவலுக்கு நீ பயப்படுவாயா? மாட்டாயா? என்று கேட்டது.
முடிவில் தன்னைத் தவிர வேறு யாருக்குமே அப்படி ஓர் அச்சம் இல்லை என்பதைத் தெரிந்து கொண்டது.
அந்த வருத்தத்திலேயே அது கொஞ்சம் இளைத்துப் போனது. இரை தேடுவதை மறந்தது. முயற்சி எதுவும் இல்லாமல் முடங்கிப் போனது.
ஒருநாள், சுருண்டு படுத்திருந்த சிங்கத்தை ஒரு யானை பார்த்தது. அதன் நிலைக்குக் காரணம் கேட்டது. சேவலின் கூவல் தன்னை ஓடவைப்பதை கூச்சத்துடன் சொன்னது சிங்கம். அதைக்கேட்ட யானை பெரிதாகப் பிளிறியது. பிறகு சிங்கத்தைப் பார்த்துச் சொன்னது. நீ எவ்வளவோ மேல். சேவல் எப்போதாவது கூவும் போது மட்டும்தான் பயப்படுகிறாய். ஆானல் நான் சதா சர்வ காலமும் ஒரு சின்னஞ்சிறு உயிரினத்தை நினைத்து பயந்துகொண்டே இருக்கிறேன் தெரியுமா? யானை சொன்னதைக் கேட்டதும் சிங்கம் அதிர்ந்தது.
என்ன சொல்கிறார் நீ என்று கேட்டது. ஆமாம் உனக்காவது சேவலின் கூவல் காதில் கேட்டால், எரிச்சலைத்தான் ஏற்படுத்தும். எனக்கோ ஒரு சிறு எறும்பு காதில் நுழைந்து விட்டால் போதும். உயிரே போய் விடும். என் காதுகளை எப்போதும் அசைத்துக் கொண்டே இருப்பதன் காரணத்தில் அதுவும் ஒன்று. எல்லோருக்கும் கஷ்டம் வந்து கொண்டேதான் இருக்கும். என்ன வித்தியாசம் என்றால், ஒவ்வொருவருக்கும் அது வேறுவேறு விதத்தில் வரும் என்பது மட்டும்தான். கஷ்டம் என்கிற சிறு கல்லை கண்ணருகே வைத்துக் கொண்டு பார்த்தால், அதன் பின்னால் இருக்கிற சந்தோஷம் என்கிற சஞ்சீவி மலைகூட தெரியாமல் போய்விடும். சொன்ன யானை காதை ஆட்டியபடியே நடந்து செல்ல, பிரச்னை இல்லாதவர்களே இல்லை என்பதை உணர்ந்த சிங்கம் சகஜ நிலைக்குத் திரும்பி கம்பீரமாக கர்ஜித்தது.